இக்காலத்தில் வாட்சப் தான் வாழ்க்கை என்றாகிவிட்டது. இளைஞர்கள் மட்டுமல்ல. பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் வாட்சப் பயன்படுக்கின்றனர்.
அதில் குறிப்பிட்ட குழுமங்கள் அன்றாடம் செய்திகளை வெளியிட்டு பரபரப்புடன் இருக்கிறது. வெளிவருகிற செய்திகள் அனைத்தும் நம்பகத் தன்மை வாய்ந்தவையா? இல்லையா என்று சிந்திக்க கூட நேரமில்லாமல், பார்த்தவுடனே பகிர்வது என்ற மோசமான பழக்கமும் நம்மிடையே தொற்றிக்கொண்டுவிட்டது.
அவைகள் ஏற்படுத்தும் பாதிப்பின் விளைவை அறியாததே அதற்கு காரணம்.
அப்போது வாட்சப்பில் நல்லதில்லையா? என்றால் இருக்கிறது. நல்லதைவிட, தீயது அதிகமாவே இருக்கிறது. அதென்ன வாட்சப் மட்டும்தான் குறைபாடு கொண்டதா? மற்ற சமூக ஊடகங்கள் எல்லாம் அப்படி இல்லையா என்றால், நிச்சயம் மற்ற சமூக ஊடகங்கள் பேட்புக், ட்விட்டர், கூகிள் ப்ளஸ் இன்ன பிறவுக்கும் அதில் பங்கு உண்டுதான். ஆனால் உடனுக்குடன் செய்திகளை வெகு விரைவாக பரவ விடுவதில் வாட்சப்புக்குத்தான் முதலிடம்.
என்னதான் செய்வது?
உங்களுக்கு வரும் வாட்சப் மேசேஜ்களை கண்மூடித்தனமாக நம்பாமல் படித்து முடித்தவுடனே, அது உண்மைதானா? அதைப் பகிர்வதால் என்னென்ன விளைவுகள் உண்டாகும். பகிரும் விடயம் அனைவருக்கும் பயனளிக்க கூடியதா? என ஒரு இரண்டு நிமிடங்கள் யோசிக்க வேண்டும். பகிர்ந்தால் பாதிப்பைவிட, நன்மை அதிகம் என்றால் அதை தாராளமாக பகிரலாம்.
வாட்சப் மெசேஜ் மட்டுமல்ல. வீடியோ, புகைப்படங்கள் போன்ற விஷயங்கள் எந்த ஒரு சமூக ஊடக வலைத்தளங்களாக இருந்தாலும் சரி. முறையான, எந்த ஒரு பிழையும் / பாதிப்பும் வராத தகவல்கள் இருந்தால் பகிர்வது நல்லதுதான்.
இதில் உள்ள மிகப்பெரிய பிரச்னை என்னவென்றால், உண்மையான தகவல்களுக்கும், புரளி மற்றும் பொய்யான தகவல்களுக்கும் மயிரிழை வித்தியாசம்தான் இருக்கும். கற்பனை சிறகை பறக்கவிட்டு அழகாக, அனைவரும் நம்பும்படி எழுதுவதில் வாட்சப், பேஸ்புக் கற்பனை எழுத்தாளர்களுக்கு கைவந்த கலை.
நம்பினால் நம்புங்கள் என்ற தலைப்பில் பல தகவல்களை அவ்வாறு எழுதி பரவ விடுகின்றனர். அவர்களின் நோக்கமே எப்படியாவது அவர்களின் தகவல்கள் இணையம் முழுவதும் சென்று சேர வேண்டும் என்பது மட்டும். அதுதான் அவர்களின் இலக்கு. அவர்களின் அந்த அதிவேக கணைகளுக்கு பலியாவது சிறார்களும், இளைஞர்களும்தான். ஏனென்றால் மிக எளிதாக உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள் அவர்கள்தான்.
வாட்சப் பயன்படுத்தும் பலரும் இப்படிதான் அதில் உள்ள கவர்ச்சியான தகவல்களை உண்மையென நம்பி உடனே ஷேர் செய்து விடுகின்றனர். இளைஞர்கள் மட்டுமா? வாட்சப் பயன்படுத்தும் பெரும்பாலனவர்கள் அப்படிதான் செய்கின்றனர். வயது வித்தியாசம் என்பதெல்லாம் இல்லை. பதிவு கவர்ச்சியாக இருந்தால் போதும். சென்டி மெண்ட் டச் உடன் முடிந்தால் போதும். ஒருமுறை அப்படிப் பட்ட தகவல்களை படித்துவிட்டால், பிறகு அதுபோன்ற தகவல்களை பரப்புவதில் அவர்களை அறியாமலே லைக், பார்வர்ட், ஷேர் பட்டங்களை தட்டி விடுகின்றனர். அது போதாதா இட்டு கட்டி எழுதுபவர்களுக்கு.. மீண்டும் மீண்டும் அதுபோன்ற இட்டுகட்டிய கதைகளை அவிழ்த்து விடுகின்றனர்.
அதையும் உண்மையென நம்பி, நன்கு சிந்திக்கத் தெரிந்த பிரபலங்கள் கூட ஒரு சில நொடிகளில் ஏமாற்றம் அடைந்து விடுகின்றனர் என்பது தான் கேலி கூத்து.
பகிர்ந்த பிறகு, அடடே உண்மை தெரியாமல் பகிந்துவிட்டோமே என வருத்தப்படுபவர்களும் உண்டு. எனவேதான் உண்மைத் தன்மையை முழுமையாக உணர்ந்துகொண்டு, அதை உறுதிப்படுத்திக்கொண்ட பிறகு பகிர்வது சிறந்தது. வாட்சப் மட்டுமல்ல.. எந்த சமூக ஊடக இணையத்தளங்களிலும் அப்படித்தான். நல்ல விஷயங்களை மட்டும், உறுதிபடுத்தப்பட்டப் பின்பு பகிர்வோம். சமூதாயத்திற்கு நல்ல தொண்டாற்றுவோம்.
– தங்கம்பழனி.