அது மட்டுமல்லாமல் வருமான வரி செலுத்துவது, அதன் விபரங்களை சரி பார்ப்பது போன்ற பயன்பாடுகளுக்கும் இந்த மொபைல் ஆப் உபயோகமாக இருக்கும். நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்ததும் இந்த ஆப் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை இல்லாதவர்கள் அதை உடனடியாக பெற:
கேஸ் இணைப்பு பெற, பாஸ்போர்ட் வாங்க, வீடு வாங்க விற்க, பி.எப். கணக்கு துவங்க அல்லது அதில் இருந்து பணத்தை எடுக்க, வங்கி கணக்கு துவங்க என்று பலவற்றுக்கும் ஆதார் அட்டை அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் ஆதார் அட்டை வழங்கும் மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடப்பதை பார்க்க முடிகிறது.
ஆதார் என்றால் என்ன?
ஆதார் என்பது இந்திய அரசின் சார்பில் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்படும் 12 இலக்க தனிநபர் அடையாள எண் ஆகும்.
இந்த எண் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் அடையாள மற்றும் முகவரி சான்றாக பயன்படும்.
பாலின மற்றும் வயது வேறுபாடு இன்றி, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் உருவாக்கப்பட்ட சரிபார்ப்பு நடைமுறையை திருப்திகரமாக நிறைவு செய்யும். எந்த குடிமகனும் ஆதாருக்காக பதிவு செய்யலாம்.
ஒவ்வொரு தனி நபரும் ஒரே ஒரு முறை பதிவு செய்து கொண்டால் போதுமானது. இந்த பதிவு இலவசமாகும்.
ஒவ்வொரு தனி நபருக்கு வழங்கப்படும் ஒவ்வொரு ஆதார் எண்ணும் தனித்துவமானது ஆகும். இது வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும். வங்கி சேவை, செல்பேசி இணைப்பு மற்றும் பிற அரசு மற்றும் அரசு சாரா சேவைகளை பெற ஆதார் எண் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
ஆதார் பற்றிய மேலும் சில தகவல்கள்
- ஆதார் என்பது ஆன்லைனில் எளிதாகவும், குறைந்த செலவிலும் சரிபார்க்கக் கூடியது.
- அரசு மற்றும் தனியார் தகவல் களத்தில் உள்ள பெருமளவிலான இரட்டை மற்றும் போலி அடையாளங்களை அகற்றுவதற்கு ஏற்ற தனித்துவமும், வலிமையையும் கொண்டது.
- ஜாதி, சமயம், மதம், பூகோளம் ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தப்படாமல் உத்தேசமாக தேர்வு செய்யப்படும் எண் ஆகும்.
ஆதார் அட்டை பெறுவது எப்படி?
- ஆதார் அட்டை பெற பதிவு செய்ய கட்டணம் எதுவுமில்லை. ஒருவர் ஒரு முறை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
- ஆதார் பதிவு மையங்களுக்கு சென்று உங்களின் அடையாள அட்டை மற்றும் இருப்பிடச் சான்றை காண்பிக்கவும்.
- ஆதார் அட்டை பெற அடையாள அட்டை மற்றும் இருப்பிடச் சான்றுக்கு 33 வகை ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அடையாள அட்டை மற்றும் வசிப்பிடச் சான்றாக வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
- புகைப்படத்துடன் கூடிய பான் கார்டு, அரசு ஐடி கார்டு ஆகியவை அடையாளச் சான்றாக எடுத்துக்கொள்ளப்படும். இருப்பிடச் சான்றாக நீங்கள் ஆதார் அட்டை கேட்டு விண்ணப்பிக்கும் சமயத்திற்கு முன்னதாக உள்ள 3 மாதங்கள் செலுத்திய தண்ணீர், மின்சாரம், தொலைபேசி கட்டண பில்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
- ஒரு வேளை உங்களிடம் மேற்கூறிய சான்றுகள் இல்லையென்றால், கெசட்டட் ஆபீசர் அல்லது தாசில்தார் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.
- எம்.பி. அல்லது எம்.எல்.ஏ./ கெசட்டட் ஆபீசர்/ தாசில்தார்/ பஞ்சாயத்து தலைவர் ஆகியோர் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய இருப்பிடச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.
- பதிவு மையத்தில் உங்கள் புகைப்படம், கைரேகை, கண்ணின் கருவிழி ஸ்கேன் ஆகியவை எடுக்கப்படும்.
- ஒரு முறை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். ஏனென்றால் ஒருவருக்கு ஒரு ஆதார் எண் தான் வழங்கப்படும்.
- நீங்கள் அளித்த தகவல்கள் சரிபார்க்கப்படும். அவை சரியாக இருந்தால் ஆதார் நம்பர் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
- ஆதார் எண் கிடைக்க 60 முதல் 90 நாட்கள் வரை ஆகலாம்.
- ஆதார் கடிதங்களை அச்சடிப்பது வினியோகிப்பது இந்தியா போஸ்ட்டின் வேலை.
- ஆதார் கடிதங்களை உரியவரிடம் கொடுக்க இந்தியா போஸ்ட் சாதாரணமாக 3-5 வாரங்கள் எடுத்துக்கொள்ளும்.